அம்பலவன் பொக்கணை வீதி – 2009 வைகாசி
ஒரு சிற்றரசின் அல்லது பெருங்கனவின்
இறுதி ஊர்வலம் போன
இடிந்த மணற்சாலை
வழியெல்லாம்
மலம்; பிணம் ;காயம் ;சனம் ;வாகனம்
கால்களின் கீழ் பொறிவது
கடல் மணலா? நம்பிக்கைகளா?
கடைசிப் பதுங்கு குழியும்
தகர்ந்து விட்டது
கடைசிப் பரா ஒளிக் குண்டும்
கடலில் வீழ்ந்து விட்டது
கடைசிப் பேருந்தும்
சரணடைந்தவர்களை ஏற்றிக் கொண்டு
சென்றுவிட்டது
கடைசிச் சொல்லையும் எடுத்துக் கொண்டு
வெளியேறு